மத்திய அரசு ஊழியர்கள் 15 நிமிடம் தாமதாக வந்தால் கட்டாய அரைநாள் விடுப்பு.. புதிய விதிமுறைகள்

டெல்லி: மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் ஆபிஸ்க்குள் வராவிட்டால் அவர்களுக்கு கட்டாய அரைநாள் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையில் சம்பள உயர்வு மற்றும் டிஏஉயர்வு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ஒழுங்கு நடவடிக்கையும் அதே அளவு எடுக்கப்பட்டு வருகிறது.

முன்பெல்லாம் மத்திய அரசு ஊழியர்கள் ஆபிஸ்க்கு வேலைக்கு வரும் நேரத்தில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை . ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

காலையில் உரிய நேரத்தில் ஆபிஸ்க்கு வர வேண்டும். மதியநேர உணவு இடைவேளை நேரத்தை அதிகமாக எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதே போல் தனியார் அலுவலகத்தில் உள்ளது போல் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட்டது. மேலும் தனியார் ஆபிஸ்களில் உள்ளது போல் மத்திய அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இவற்றை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வந்தது. இதனிடையே 2020 முதல் 2022 வரை பரவிய கொரோனா தொற்று காரணமாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை இருந்தது. அந்த மூன்று ஆண்டுகளில் பெரிய அளவில் அரசு ஊழியர்களுக்கு நேரக்கட்டுப்பாடு இல்லாமல் தளர்வு அளிக்கப்பட்டது. அதிகாரிகள் முதல் ஊழியர்களுக்கு இந்த தளர்வு சாதகமாக இருந்தது.

இதனிடையே மத்திய அரசு அலுவலகங்களில் பழைய படி சில அரசு ஊழியர்கள் மிகவும் தாமதமாக வருவதாகவும், விரைவாக வீட்டிற்கு செல்வதாகவும் புகார்கள் எழுந்தது. பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என ரகசிய தகவல்கள் மத்திய அரசுக்கு சென்றன. குறிப்பாக ஊழியர்களின் காலைநேர வருகை என்பது மிகவும் தாமதமாக உள்ளது என புகார்கள் உள்ளது.

எனவே இதை சரிசெய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் (வழக்கமான அலுவல் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என ‘கிடுக்கிப்பிடி’ உத்தரவு போட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் காலை 9.15 மணிக்கு பிறகு தாமதமாக அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அரைநாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு தாமதமாக வருவது தெரிய வந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

இதைப்போல முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த சுற்றறிக்கையால், தாமதமாக வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி உறைந்து போய் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews