News
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடியூரப்பா!
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஜூலை 23ஆம் தேதி அம்மாநில சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றது.
இதையடுத்து அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள பாஜக, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. அதன்படி, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ஆட்சி கவிழ காரணமாக இருந்த, 17 அதிருப்தி எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். புதிதாக பதவியேற்றுள்ள பாஜக அரசு, இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருந்தார்.
224 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில் சபாநாயகர் தவிர்த்து, தற்போது 207 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அதன்படி பெரும்பான்மை பெற 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
பாஜகவை பொறுத்தவரை ஒரு சுயேட்சை எம்.எல்.ஏவின் ஆதரவுடன் 106 என்ற எண்ணிக்கையை கொண்டுள்ளது. காங்கிரஸ் 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 34, பகுஜன் சமாஜ் கட்சி 1 என்ற எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் இன்று காலை குரல் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பாஜகவிற்கு 106 வாக்குகள் கிடைத்தன.
காங்கிரஸ் – மஜத கூட்டணிக்கு 100 வாக்குகள் கிடைத்தன. இதன்படி, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இனி கர்நாடகாவில் பாஜக அரசின் ஆட்சி தொடரும்.
