போலீஸ்காரங்க எல்லாருமே ஃபிராடு தான் என போலீஸ்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வம்பை விலை கொடுத்து வாங்கி தற்போது சிறையில் கம்பி எண்ணும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் இன்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அந்த இரு வாலிபர்களும் காவல்துறையினர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோதே ஒரு இளைஞர் தனது மனைவிக்கு போன் செய்ய அவருடைய மனைவி சம்பவ இடத்திற்கு வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.
போலீசார் எல்லாருமே ஃபிராடுகள் என்றும் போலீசார்களை அவதூறாக பேசினார். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் அவர் போலீசாரின் தொப்பியை எடுத்து வீசியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகளிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை இன்னொரு காவல்துறை அதிகாரி தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.
இந்த வீடியோவின் ஆதாரத்தை வைத்து அந்த பெண் மற்றும் அவரது கணவர் கணவரின் நண்பர் ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூவரின் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் அபராதம் மட்டும் கட்டிவிட்டு சென்றிருக்கலாம், ஆனால் அவர்கள் தன்னுடைய மனைவியை அழைத்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தற்போது மூன்று பேர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.