14.4 ஓவர் முடிந்ததும் என்ன சொல்லியிருப்பார் ஆசிஷ் நெஹ்ரா? ஃபைனல் ஹைலைட்ஸ்..!

சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்

நேற்றைய போட்டியில் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சிஎஸ்கே அணி விளையாடிக் கொண்டிருந்தது. 14 ஓவர் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்ததால் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து 15வது ஓவரை மோகித் சர்மா வீச வந்தார். முதல் பந்து ஷிவம் துபேவுக்கு அவர் வீசிய நிலையில் அந்த பந்து ரன் ஏதும் இல்லாமல் சென்றது. இரண்டாவது பந்தில் ஷிவம் ஒரே ஒரு ரன் அடிக்க, மூன்றாவது பந்தில் ஜடேஜா ஒரு ரன் அடிக்க, நான்காவது பந்தில் ஷிவம் மீண்டும் ஒரு ரன் அடித்தார். இதனை அடுத்து 2 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் ஜடேஜா விஸ்வரூபம் எடுத்தார், 14.5 வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 14.6 ஆவது ஓவரில் ஒரு பவுன்டரியும் அடித்ததை அடுத்து சிஎஸ்கே அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த நிலையில் 14.4 ஓவர் முடிவடைந்ததும் பவுலருக்கு தண்ணீர் கொடுக்க ஒரு ஆளை ஆஷிஷ் நெஹ்ரா அனுப்பினார். அப்போது அவர் சில டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். அந்த நபர் ஆசிஷ் நெஹ்ரா சொன்னதை மொஹ்த் சர்மாவிடம் கூறினார் அதன்பிறகு தான் ஒரு பெரிய ஆலோசனை நடந்தது, ஹர்திக் பாண்ட்யாவும் சில டிப்ஸ்களை கூறினார். இதை அனைத்தையும் சேர்த்து மொகித் சர்மா வீசியபோதுதான் ஜடேஜா அந்த ஆலோசனை அனைத்தையும் அடித்து நொறுக்கி சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல தோனியை பொருத்தவரை ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் தனது முகத்தில் எந்த விதமான ரியாக்ஷனையும் காண்பிப்பதில்லை. ஆனால் நேற்று முதல்முறையாக அவர் ஆனந்த கண்ணீர் விடுத்ததை பார்க்க முடிந்தது. அது மட்டும் இன்றி அவர் மகிழ்ச்சி மிகுதியில் ஜடேஜாவை கட்டிப்பிடித்து தோள் மீது தூக்கி கொண்டார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்றவுடன் தல தோனி பௌலிங் எடுத்தது தவறு என்று பலர் விமர்சனம் செய்தனர். சுப்மன் கில் போன்ற அபாரமான பேட்டிங் திறமை உள்ள அணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது தவறு என்று பலர் கூறினார். ஆனால் தோனி கணித்தபடி சரியாக இரண்டாம் பாதியில் மழை வந்தது, அதன் பிறகு டக்வொர்த் லீவீஸ் முறை பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் தல தோனி முன்கூட்டியே கணித்தார். இதனையடுத்து தான் பலரும் பெளலிங் எடுத்தது சரிதான் என்பதை ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் கடைசி இரண்டு பந்தங்களில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் தான் அமைதியாக இருக்க வேண்டும், கண்டிப்பாக அடித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என மனதுக்குள் கூறிக் கொண்டதாகவும் அந்த பயிற்சிதான் தனக்கு இரண்டு பந்துகளை சரியாக அடிக்க முடிந்தது என்றும் ஜடேஜா வெற்றிக்கு பின் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மொத்தத்தில் நேற்று ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியினர் நன்றாக விளையாடினாலும் அதிர்ஷ்டமும் அவர்கள் பக்கம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.