ஈரோடு இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்தியாவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை உற்று நோக்குகிறது. காரணம் என்ன என்று பார்த்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே காங்கிரஸ் கட்சி தொகுதியாக இருப்பதால் அது காங்கிரஸ் கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்தது. அதனை தொடர்ந்து எப்போதுமே தாமதமாக வேட்பாளரை அறிவிக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை உடனடியாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இளங்கோவனை அறிவித்தது.
ஆனால் எப்போதுமே வேட்பாளர்களை முந்தி அறிவிக்கும் அதிமுக இந்த முறை மிகவும் தாமதப்படுத்தியது. காரணம் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து இருப்பதால் இந்த காரணம் கூறப்பட்டது மேலும் சின்னம் ஒரு பிரச்சினையாக கருதப்பட்ட நிலையில தற்போது அதிமுக இபிஎஸ் அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிமுகவில் இந்த முறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாணி பின்பற்றப்படும் என பலரும் கூறி வந்தனர்.
அதாவது அடிமட்ட தொண்டனை இந்த தேர்தலில் களம் காண வைத்து அவரை வெற்றி பெற செய்வது தான் அந்த பாணி. அதன் அடிப்படையில் நந்தகோபால் என்பவரும் குணசேகரன் என்பவரும் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் பேசப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் மீண்டும் தென்னரசுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு என்ன காரணம் எதனால் மனமாற்றம் அடைந்தார் இபிஎஸ் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேபோல் ஓபிஎஸ் அணியிலும் அதன் மாவட்ட செயலாளர் முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் புது அடிமட்ட தொண்டனாக இருக்கும் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களையும் சேர்த்து புதிய பொதுக்குழுவை நடத்தி பொதுவான வேட்பாளர் தேர்ந்தெடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் புதிதாக பொதுக்குழு கூடுமா? அப்படி கூடினால் புதிய முகத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ஓபிஎஸ் ஆதரவாளருக்கு வாய்ப்பா?இபிஎஸ் ஆதரவாளருக்கு வாய்ப்பா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.