தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் தமிழகத்தில் சாலைகளில் போக்குவரத்து, வீடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் காய்கறிகளின் விலையையும் இந்த கனமழையே நிர்ணயித்ததாக காணப்படுகிறது.
ஏனென்றால் கனமழை காரணமாக விவசாய நிலங்களில் காய்கறிகள் நாசமடைந்தன. அதோடு காய்கறிகளின் வரத்து சந்தைகளில் குறைந்தது. இதன் விளைவாக சென்னை கோயம்பேட்டில் அனைத்து காய்கறிகளும் தாறுமாறாக விலை உயர்ந்து விற்கப்பட்டது.
குறிப்பாக ஒரு வாரத்திற்கு முன்பு வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விற்பனையாளர்கள் மட்டுமின்றி வாங்கி செல்பவர்களும் பெரும் சிரமத்தில் இருந்தனர்.
இந்த விலை உயர்வு தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு காயின் விலை 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது பலருக்கும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிலோ ஒன்றுக்கு 180 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யபடுகிறது.
இந்த முருங்கைக்காய் சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 200க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விற்பனையாளர்கள் என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.