விநாயகர் சதுர்த்தி சூப்பர் ஸ்பெஷல் பலகாரம் – பிடி கொழுக்கட்டை!

விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் முக்கியமாக செய்யும் பலகாரம் பிடி கொழுக்கட்டை. கைகளால் மாவைப் பிடித்து கைவிரல்கள் பதிய செய்யப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. இதை விநாயகருக்கு நைவேத்தியமாக செய்து வழிபடுவர். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாமா…

தேவையான பொருள்கள்

அரிசி மாவு – ஒரு கப்

அச்சு வெல்லம் – முக்கால் கப்

தண்ணீர் – தேவைக்கு

thenkai thuruval
thenkai thuruval

தேங்காய் துருவல்; – ஒரு கப்

ஏலக்காய் பொடி – 2 கரண்டி

நெய் – ஒரு கரண்டி

எப்படி செய்வது?

அச்சுவெல்லத்தை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கரைத்து விடுங்க. அப்புறம் அதை வடிகட்டுங்க. இப்போது வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்க. அதனுடன் தேங்காய் துருவலை சேருங்க. இப்போது அரிசி மாவை அதனுடன் சேர்த்து கட்டிகள் விழாதவாறு நல்லா கலந்து விடுங்க.

kolukkattai maavu
kolukkattai maavu

கொஞ்ச நேரத்தில் தண்ணீர் இறுகி மாவு கெட்டியான பதத்திற்கு வந்து விடும். அடுப்பை அணைத்து விட்டு மாவைக் காற்றோட்டமான இடத்தில் வைத்து ஆற விடுங்க.

இப்போது சின்ன சின்ன உருண்டைகளாகப் பிடிங்க. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நீளமாக கொழுக்கட்டையை வரும் வகையில் கைவிரல்களால் பிடித்து தனியாக வையுங்க. இதை இட்லி சட்டியில் வைத்து கால் மணி நேரம் வேக விடுங்க.

அவ்ளோ தான்…சூடான சுவையான பிடி கொழுக்கட்டை தயார். இந்தக் கொழுக்கட்டைக்கு அச்சுவெல்லத்திற்குப் பதிலாக கருப்பட்டியை வைத்தும் செய்யலாம். பார்ப்பதற்கும் சரி.

சாப்பிடுவதற்கும் சரி. சுவையாக இருக்கும் இந்தப் பிடி கொழுக்கட்டை. ஒரு பிடி பிடித்துவிடலாம். நகர்ப்புறங்களில் பெரிய பெரிய ரெஸ்டாரண்டுகளில் இதையும் பலகாரமாக வைத்து விற்பனை செய்வதைக் காணலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews