மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும் போது, கள்ளச்சாராயம் அருந்தி இவ்வளவு பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியைளிக்கிறது.
இழப்பீடு அளித்தாலும், கள்ள சாராயத்தை விற்பனை செய்யப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், அரசு அதை தாண்டி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது.
மது விலக்கை நடைமுறைப்படுத்த தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டது. மது விற்பனையை அனுமதித்தும் கூட கள்ள சாராயம் புழங்குகிறது. கள்ள சாராயத்தை ஒழிப்பதும், மது விலக்கை அமல் படுத்துவதும் சம காலத்தில் நிகழ வேண்டும். இது குறித்து முதல்வர் ஆராய வேண்டும்.
அதிகாரிகள் தான் அரசை இயக்குகிறார்கள் என்பது எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதிகாரிகள் தான் அரசை வழி நடத்துகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அது பிரதமருக்கும் பொருந்தும்.
கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியை விசிக ஆதரிக்கிறது. அதற்காக, ஒரு சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கையை முன்வைத்து அரசின் செயல்பாடுகளை மொத்தமாக புறக்கணிக்க முடியாது.
பாண்டிச்சேரி மில்லி என்ற பெயரில் மரக்காணம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் இந்த கள்ளச்சாராயத்தை அருந்தி வந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் தண்டித்து
களையெடுக்கப்பட வேண்டும்.
கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது அந்த செயலை ஊக்குவிக்கும் என்ற கருத்தை மறுக்க முடியாது. ஆனால், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு இந்த இழப்பீட்டை ஏற்க வேண்டியுள்ளது.