உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் எல்லைப் பகுதிகளுக்கு வெளியேறியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. உக்ரைன் தலைநகரான கீவ் நகரைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகர் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. ஏவுகணை மற்றும் வெக்யூம் பாம்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் இதுவரை 9 விமானங்கள் மூலமாக கடந்த 26ம் தேதி தொடங்கி, இன்று வரை இந்தியர்களை மத்திய அரசு மீட்டு கொண்டு வந்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனை விட்டு இதுவரை 3 ஆயிரத்து 352 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இதுவரை உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் இந்தியர்கள் எல்லைப்பகுதிகளுக்கு வெளியேறியுள்ளதாகவும், எல்லை பகுதிகளில் தஞ்சமடைந்த இந்தியர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.