இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6 ந்தேதி அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில் 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதனால் இரு நாடுகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நகரங்கள் உருகுலைந்து போயுள்ளது.
இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கான்கிரீட் குவியல்களாக குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்குள் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் முக்கிய நகரங்களில் சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு குழுவினர் சென்றடைவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
உறவுகளையும், உடமைகளையும் இழந்து உயிர் தப்பிய துருக்கி, சிரிய மக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அங்கு நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிரியில் இருந்து தப்பிக்க சாலையோரங்களில் மரக்கட்டைகளை பற்றவைத்து குளிர் காயும் காட்சிகள் மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது.