ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.உள்ளிட்ட யாருக்கும் ஆதரவு இல்லை; தேர்தல் ஆணையத்தால் இந்த தேரத்லில் நாங்கள் போட்டியிடவில்லை வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க. போட்டியிடும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அ.ம.மு.க. வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதை விட நல்ல வாக்கு சதவிகிதத்தை பெறுவோம் என நம்பினோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை. அ.தி.மு.க., தி.மு.க.ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை எனத் தெரிவித்தார்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்கு தெரியும். ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கு, துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவு அளிக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க. போட்டியிடும். இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம். இடைத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? என கேள்வி எழுப்பிய தினகரன், அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை எனக்கூறினார்.