இணைந்தது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணிகள்: கூட்டாக செய்தியாளர் சந்திப்பு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுக நான்கு பிரிவாக பிரிந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் அணி இரண்டும் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கட்டிக் காத்த அதிமுக இருவரின் மறைவுக்கு பின்னால் துண்டு துண்டாக சிதறியது. முதலில் சசிகலா பிரிந்த நிலையில் அவர் சிறையில் இருக்கும்போது டிடிவி தினகரன் பிரிந்து அமமுக என்ற தனிக்கட்சியை தொடங்கினார்,. பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி என்று பிரிந்த நிலையில் அதிமுக மொத்தம் நான்காக பிரிந்தது.

அதிமுக என்ற ஒரு மாபெரும் கட்சி நான்காக பிரிந்ததால் வாக்குகள் சிதறியது என்பதும் அதனால் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தலில் அதிமுக குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அதிமுகவின் இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் இனிவரும் காலங்களில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இருவரும் சற்று முன்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இனிமேல் ஓ இருவரும் இணைந்து செயல்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த அணிக்கு சசிகலாவின் ஆதரவும் இருக்கும் என்பதால் மூவரும் வரும் தேர்தலில் இணைந்து செயல்படுவார்கள் என்று தெரிகிறது..

எனவே நான்காக இருந்த அதிமுக தற்போது இரண்டாக மாறியுள்ளதை அடுத்து இரு அணிகளில் ஏதோ ஒரு அணிக்கு நல்ல வலிமை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த இரு அணிகளும் இணைந்து ஒரே அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து பணியாற்றுவார்களா? ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல் ஒருங்கிணைந்த அதிமுகவாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews