இன்று காரடையான் நோன்பு…. பூஜைக்கு ஏற்ற நேரம், விரத முறைகள் என்னென்ன தெரியுமா?

எமனுடன் போராடி இறந்து போன கணவனையை உயிருடன் மீட்டு வந்த சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள் சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.

இந்த நாளில் சுமங்கலி பெண்கள் தனக்கு கிடைத்த கணவன் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டுமென இந்து கடவுள்களை வேண்டிக்கொண்டு விரதம் இருப்பார்கள். கணவனின் ஆயுளை திரும்ப கொடுத்த எமதர்மனை சாவித்ரி, சில பொருட்களை படைத்து ஆத்மார்த்தமாக வணங்கிய தினத்தை தான் காரடையான் நோன்பு என கொண்டாடுகிறோம்.

நோன்பு எடுப்பதற்கான வழிமுறைகள்:

நோன்பு நாளில், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிட வேண்டும். அதன் மீது ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.

அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள பெண் தெய்வங்களின் படம் அல்லது சிலையை நன்றாக அலங்கரித்து, அதன் முன்பு அமர்ந்து காரடையான் நோன்பு அன்று சொல்ல வேண்டிய சில ஸ்லோகங்களை கூறி பிராத்திக்க வேண்டும்.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். மாங்கல்ய பலம் பெறும். தாலிபாக்கியத்துடன் தீர்க்கசுமங்கலியாக நீடூழி வாழ்வார்கள் என்பது உறுதி என்பது ஐதீகம்.

14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு நேரம் : மார்ச் 14, காலை 6:40 – மார்ச் 15, 12:21 மணி வரை, சரடு கட்டிக்கொள்ளும் நேரம் : மார்ச் 15ம் தேதி அதிகாலை 12.21 மணி ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews