டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான சிலபஸ்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். இதில் 100 கேள்விகள் பொதுத் தமிழ் பகுதியில் இருந்து கேட்கப்படும். 75 கேள்விகள் பொது பாடத்திட்டதிலிருந்து கேட்கப்படும். 25 கேள்விகள் திறன் சோதனை கேள்விகளாக இருக்கும். இந்த 200 கேள்விகளும் பத்தாம் வகுப்பு தரத்திற்குட்ட கேள்விகளாகவே இருக்கும்.

பொதுத் தமிழ் பகுதியில் இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும் என்ற மூன்று பிரிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பொதுத் தமிழ் பாடத்திட்டம் (TNPSC Group 4 General Tamil Syllabus)

பகுதி – அ

இலக்கணம்

1. பொருத்துதல் – இதில் கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு பொருத்தமான பொருளை தேர்வு வேண்டும் மற்றும் புகழ்பெற்ற நூல்களையும் அவற்றை எழுதிய ஆசிரியர்களையும் பொருத்துமாறு கேள்விகள் இருக்கும்.

இதையும் பார்க்க: தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும்

2. தொடரும் தொடர்பும் அறிதல் – ஒரு குறிப்பிட்ட தொடரால் குறிக்கப்படும் சான்றோரை அறிய வேண்டும் மற்றும் நூல்களின் அடைமொழிகள் பற்றி கேட்கப்படும்.

இதையும் பார்க்க: சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்

3. பிரித்தெழுதுதல் – கொடுக்கப்பட்ட வார்த்தையை சரியான முறையில் பிரித்து எழுதிருப்பதை அறிய வேண்டும்.

4. எதிர்ச்சொல் – கொடுக்கப்பட்ட வார்த்தைக்கான சரியான எதிர்ச்சொல்லை அறிய வேண்டும்.

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் – கொடுக்கப்பட்ட வார்த்தை அல்லது வாக்கியத்திற்கு பொருந்தாத சொல்லை அறிய வேண்டும்.

6. பிழை திருத்தம் – இதில் கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சந்திப் பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளைக் கண்டறிதல், மரபுப் பிழைகளை நீக்குதல், வழூஉச் சொற்களைக் கண்டறிதல் மற்றும் பிறமொழிச் சொற்களை நீக்குதல் போன்றவை இடம் பெறும்.

7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் – இதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆங்கிலச் சொல்லுக்கு சரியான சொல்லை தேர்ந்தெடுக்க வேண்டும்.

8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல் – இதில் ஒரே மாதிரி உச்சரிப்பு தன்மை கொண்ட இரண்டு வார்த்தைகளுக்கு சரியான பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

9. ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் – கொடுக்கப்பட்ட ஒரு எழுத்து தரும் பொருளைக் கண்டறிய வேண்டும்.

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் – கொடுக்கப்பட்ட சொல்லின் வேர்ச்சொல் என்ன என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

11. வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல் – கொடுக்கப்பட்ட வேர்ச்சொல்லிலிருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்க வேண்டும்.

12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் – கொடுக்கப்பட்ட சொற்களில் அகரவரிசைப் படி அமைந்துள்ளதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல் – கொடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு சரியான சொற்றோடரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல் – கொடுக்கப்பட்ட பெயர்ச் சொல்லை வகை என்ன என்று கண்டறிய வேண்டும்.

15. இலக்கணக் குறிப்பறிதல் – கொடுக்கப்ப்ட்ட சொல்லின் இலக்கணத்தைக் கண்டறிதல்.

16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் – கொடுக்கப்பட்ட விடைக்கான சரியான வினாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் – கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியம் என கண்டறிய வேண்டும்.

18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல் – கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டறிய வேண்டும்.

19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதல் – கொடுக்கப்பட்டுள்ள உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதல்.

21. பழமொழிகள்.

பகுதி – ஆ

இலக்கியம்

1. திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்) போன்றவை இடம் பெறும். அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்டம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு ஆகிய இருபத்தைந்து அதிகாரங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

2. அறநூல்கள் – நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள் பற்றியும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள் போன்றவை பற்றியும் கேட்கப்படும்.

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள் பற்றியும், பாவகை, சிறந்த தொடர்கள் பற்றியும் கேட்கப்படும்.

4. புறநானூறு, அகநானூறு, நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள் போன்றவை கேட்கப்படும்.

5. சிலப்பதிகாரம், மணிமேகலை தொடர்பான செய்திகள் பற்றியும், அவற்றில் உள்ள மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் பற்றியும் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங்காப்பியங்கள் தொடர்பான செய்திகள் போன்றவை பற்றியும் கேட்கப்படும்.

6. பெரியபுராணம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவிளையாடற் புராணம், தேம்பாவணி மற்றும் சீறாப்புராணம் தொடர்பான செய்திகள் போன்றவை கேட்கப்படும்.

7. சிற்றிலக்கியங்கள்:

திருக்குற்றாலக்குறவஞ்சி, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது, நந்திக்கலம்பகம், முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் மற்றும் இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள் போன்றவை கேட்கப்படும்.

8. மனோன்மணியம், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) மற்றும் அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள் போன்றவை கேட்கப்படும்.

9. நாட்டுப்புறப் பாட்டு மற்றும் சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள் கேட்கப்படும்.

10. சமய முன்னோடிகள் – அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார் மற்றும் உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் மற்றும் சிறப்புப் பெயர்கள் போன்றவை கேட்கப்படும்.

பகுதி-இ

தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் மற்றும் கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள் மற்றும் சிறப்புப் பெயர்கள் போன்றவை கேட்கப்படும்.

2. மரபுக் கவிதை – முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மற்றும் மருதாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள் போன்றவை கேட்கப்படும்.

3. புதுக்கவிதை – ந. பிச்ச மூர்த்தி, சி.சு. செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா. மீனாட்சி, சி. மணி, சிற்பி, மு. மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி மற்றும் ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள் போன்றவை கேட்கப்படும்.

4. தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார் மற்றும் பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள் கேட்கப்படும்.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள் கேட்கப்படும்.

6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர், பொருத்துதல் வகையில் கேட்கப்படும்.

7. கலைகள் – சிற்பம், ஓவியம், பேச்சு மற்றும் திரைப்படக்கலை தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்

8. தமிழின் தொன்மை – தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் திராவிட மொழிகள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

9. உரைநடை – மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா. தனிநாயகம் அடிகள் மற்றும் செய்குதம்பி பாவலர் – மொழி நடை தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

10. உ.வே. சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் மற்றும் சி.இலக்குவனார் ஆகியோர்களின் தமிழ்ப்பணி தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

12. ஜி.யு. போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு மற்றும் சிறப்புத் தொடர்கள் போன்றவை கேட்கப்படும்.

13. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்கர், அம்பேத்கர், காமராசர், ம.பொ. சிவஞானம் மற்றும் காயிதேமில்லத் ஆகியோர்களின் சமுதாயத் தொண்டு பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும், பெருமையும் மற்றும் தமிழ்ப் பணியும் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

17. தமிழ் மகளிரின் சிறப்பு – மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர்  பற்றியும் விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள் மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் பற்றியும் கேட்கப்படும்.

18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள், கடற் பயணங்கள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார மற்றும் திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள் போன்றவை கேட்கப்படும்.

21. நூலகம் பற்றிய செய்திகள் கேட்கப்படும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பொது அறிவு பாடத்திட்டம் (TNPSC Group 4 General Studies Syllabus)

1. பொது அறிவியல்

i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் பற்றியும், இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல், அன்றாட வாழ்வில் இயந்திரவியல் பற்றியும், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும் பற்றியும் கேட்கப்படும்.

ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள் பற்றியும், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம் பற்றியும் கேட்கப்படும்.

iii. உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் பற்றியும் உயிரினங்களின் வகைப்பாடு பற்றியும் பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள் பற்றியும் கேட்கப்படும்.

iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பற்றி கேட்கப்படும்.

2. நடப்பு நிகழ்வுகள்

i. அண்மை நிகழ்வுகளின் தொகுப்புகள், தேசியச் சின்னங்கள் பற்றியும் மாநிலங்கள் குறித்த விவரங்கள் பற்றியும் செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் பற்றியும் விளையாட்டு பற்றியும் நூல்களும் ஆசிரியர்களும் பற்றியும் கேட்கப்படும்.

ii. நலன் சார் அரசுத் திட்டங்கள் பற்றியும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும் பற்றியும் கேட்கப்படும்.

iii. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் பற்றியும் புவியியல் அடையாளங்கள் பற்றியும் தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள் என்னென்ன என்பது பற்றியும் கேட்கப்படும்.

3. புவியியல்

i. புவி அமைவிடம் பற்றியும் இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப் பொழிவு, வானிலை மற்றும் காலநிலை பற்றியும் நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள் பற்றியும் கேட்கப்படும்.

ii. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பற்றி கேட்கப்படும்.

iii. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் பற்றி கேட்கப்படும்.

iv. பேரிடர் தொடர்பான தகவல்கள், பேரிடர் மேலாண்மை பற்றிய தகவல்கள், சுற்றுச்சூழல் பற்றிய தகவல்கள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

4. இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு

i. சிந்து சமவெளி நாகரிகம் பற்றியும் குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் மற்றும் தென் இந்திய வரலாறு பற்றியும் கேட்கப்படும்.

ii. இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் பற்றியும், வேற்றுமையில் ஒற்றுமை பற்றியும், இனம், மொழி, வழக்காறு பற்றியும் கேட்கப்படும்.

iii. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

5. இந்திய ஆட்சியியல்

i. இந்திய அரசியலமைப்பு பற்றிய தகவல்கள்அரசியலமைப்பின் முகவுரை பற்றிய தகவல்கள், அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் பற்றிய தகவல்கள், ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

ii. குடியுரிமை பற்றியும், அடிப்படை உரிமைகள் பற்றியும், அடிப்படைக் கடமைகள் பற்றியும், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் பற்றியும் கேட்கப்படும்.

iii. ஒன்றிய நிர்வாகம் தொடர்பான தகவல்கள், ஒன்றிய நாடாளுமன்றம் பற்றிய தகவல்கள், மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் பற்றிய தகவல்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் பற்றி கேட்கப்படும்.

iv. கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள் பற்றி கேட்கப்படும்.

v. தேர்தல் தொடர்பான தகவல்கள் இந்திய நீதி அமைப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பற்றி கேட்கப்படும்.

vi. பொது வாழ்வில் ஊழல் பற்றிய தகவல்கள், ஊழலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் பற்றிய தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய தகவல்கள், பெண்களுக்கு அதிகாரமளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் மனித உரிமைகள் சாசனம் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

6. இந்தியப் பொருளாதாரம்

i. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் பற்றியும் ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் மதிப்பீடு மற்றியும் திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் பற்றியும் கேட்கப்படும்.

ii. வருவாய்க்கான ஆதாரங்கள் பற்றிய தகவல்கள், இந்திய ரிசர்வ் வங்கி பற்றிய தகவல்கள், நிதி ஆணையம் பற்றிய தகவல்கள், மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு பற்றிய தகவல்கள், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

iii. பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்த்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை.

7. இந்திய தேசிய இயக்கம்

i. தேசிய மறுமலர்ச்சி பற்றியும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் பற்றியும் இந்திய தேசிய காங்கிரஸ் பற்றியும் தலைவர்கள் உருவானது பற்றியும், பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள் பற்றியும் கேட்கப்படும்.

ii. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

8. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்

i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

ii. திருக்குறள்:

அ. மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் என்பது பற்றிய தகவல்கள் கேட்கப்படும்.

ஆ. அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை பற்றி கேட்கப்படும்.

இ. மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் பற்றி கேட்கப்படும்.

ஈ. திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை பற்றி கேட்கப்படும்.

உ. சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு பற்றி கேட்கப்படும்.

ஊ. திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் பற்றி கேட்கப்படும்.

iii. விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு பற்றியும், ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் பற்றியும், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு பற்றியும் கேட்கப்படும்.

iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்த்திருத்தவாதிகள், சீர்த்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள் பற்றி கேட்கப்படும்.

9. தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

i. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள் என்பது தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்.

ii. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள் பற்றி கேட்கப்படும்.

iii. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் பற்றி கேட்கப்படும்.

10. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்

i. சுருக்குதல், விழுக்காடு, மீப்பெரு பொதுக் காரணி கண்டறிதல், மீச்சிறு பொது மடங்கு கண்டறிதல் ஆகியவை இடம்பெறும்.

ii. விகிதம் மற்றும் விகிதாச்சாரம் கண்டறிய வேண்டும்.

iii. தனி வட்டி, கூட்டு வட்டி, பரப்பு , கொள்ளளவு, காலம் மற்றும் வேலை ஆகியவை இடம்பெறும்.

iv. தருக்கக் காரணவியல், புதிர்கள் அறிதல், பகடை, காட்சிக் காரணவியல், எண் எழுத்துக் காரணவியல் மற்றும் எண் வரிசை ஆகியவை இடம்பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews