தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகியது. இதையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 1 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இந்நிலையில் கடலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. சீல்களை அகற்றிவிட்டு, பூட்டை திறக்க முயன்ற அதிகாரிகள் சாவி வேலை செய்யாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் தான் சரியான சாவி இல்லை என்பதும், சாவியை அதிகாரி மாற்றிக் கொண்டு வந்ததால் பதற்றம் நிலவியது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டிகளின் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. வ.புதுப்பட்டி பேரூராட்சிக்கான தபால் பெட்டியின் சாவி இல்லாததால் பூட்டு உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.