திருமண மண்டபத்தில் மது விருந்து: அரசாணையை திருத்தியது தமிழக அரசு..!

திருமண மண்டபங்களில் மது விருந்து அனுமதிக்கப்படும் என நேற்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் இதற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தமிழக அரசின் இந்த அரசாணையை திருத்தி திருமண மண்டபத்தை அந்த அரசாணையில் இருந்து நீக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் திருமண மண்டபத்தில் மது அனுமதிக்கப்படுவதற்கு தங்களது சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் திருத்தப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

வணிக வளாகங்கள்‌ உட்பட மாநாடுகள்‌ நடைபெறும்‌ இடங்கள்‌, கூட்ட அரங்குகள்‌, விருந்து மண்டபங்கள்‌, விளையாட்டு மைதானங்கள்‌ ஆகியவற்றில்‌ மதுபானம்‌ வைத்திருப்பதற்கும்‌, பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம்‌, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப்‌, இமாச்சலப்‌ பிரதேசம்‌, புதுதில்லி போன்ற சில மாநிலங்களில்‌ நடைமுறையில்‌ உள்ளவாறு, தமிழ்நாட்டிலும்‌ வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில்‌ பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில்‌, திருமணக்‌ கூடங்களும்‌, இதர
இடங்களும்‌ இடம்‌ பெற்றிருந்தன.

இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன்‌ பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள்‌, அரங்குகள்‌ ஆகியவற்றில்‌ நடைபெறும்‌ தேசிய நிகழ்வுகள்‌, பன்னாட்டு நிகழ்வுகள்‌, உச்சி மாநாடுகள்‌ மற்றும்‌ சர்வதேச மற்றும்‌ தேசிய விளையாட்டு நிகழ்வுகள்‌ நடைபெறும்‌ விளையாட்டு மைதானங்கள்‌ / விளையாட்டு அரங்குகளில்‌ அந்த நிகழ்வுகள்‌ நடைபெறும்போது மட்டும்‌ மதுபானம்‌ வைத்திருத்தல்‌ மற்றும்‌ பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம்‌ வழங்கப்படும்‌ என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.

அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில்‌ வெளியிடப்பட்டிருந்த வணிகப்‌ பகுதிகள்‌ அல்லாத இடங்களில்‌ நடைபெறும்‌ கொண்டாட்டங்கள்‌, விழாக்கள்‌, விருந்துகள்‌ போன்றவற்றில்‌ மதுபானம்‌ வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம்‌ வழங்குவதற்கான முறையையும்‌, இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில்‌ நீக்கம்‌ செய்து தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews