நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு… தமிழக அரசு உத்தரவு!
ரூ.100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதிகளில் “நமக்கு நாமே” திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்து முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் “நமக்கு நாமே” செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 50 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் தற்போது 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பில் மீண்டும் செயல்படுத்தப்படுவதையும், நமக்கு நாமே திட்டப்பணிகளுக்கான மதிப்பீட்டுத்தொகை மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்கள் இத்திட்டத்தில் கட்டலாம் எனத் தெரிவித்துள்ளது.
பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளையும் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளலாம் என்றும், ஊரகப்பகுதிகளில் கோரிக்கைகள் அதிகளவு வரப்பெற்றால் முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
