திருவெம்பாவை பாடலும் விளக்கமும் -3


27ae0c868884dbfa0c2ec8814c46a45c-2

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

பொருள்:

தோழி:முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற!

பெண்: தோழி! “ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின்மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப்போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! 

தோழி: “அப்படியில்லையடி! இறைவன்மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாடமுடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழவேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

 

நமக்கு எதாவது தேவையென்றால்மட்டும் கோவிலுக்கு செல்வது, பூஜை, அர்ச்சனை, நேர்த்திக்கடன் என அமர்க்களப்படுத்துவதும், வேண்டுதல் நிறைவேறவில்லையென்றால் அவனை பழிப்பது அல்ல பக்தி.  எந்த சூழ்நிலையிலும், எது வந்தபோதிலும் அவனை  வணங்கிக்கொண்டே இருப்பதுதான் நிஜ பக்தி. பக்தி என்றால் என்னவென்பதை  இளம் அடியார்களுக்கு சொல்லி புரியவைக்கவேண்டியது மூத்த அடியார்களின் பொறுப்பு என்பதையே இப்பாடல் விளக்குகின்றது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews