கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாக தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடியது மட்டுமல்லாமல் தீவைத்துக் கொளுத்தினர்.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால், நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறினார்.
அதே போல் மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்த சூழலில் பள்ளியை திறக்க வேண்டும் என கடந்த மாதம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதேசமயம் பெற்றோர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மூடப்பட்ட பள்ளியை விரைவில் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
தற்போது பள்ளியை சீரமைத்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.