தமிழில் 5 ஸ்டார், விரும்புகிறேன், மற்றும் திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுசி கணேசன். இவர் இயக்கத்தில் வெளியான திருட்டுப்பயலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் சுசி கணேசன் தமிழ் சினிமாவில் சற்று கவனிக்கப்படக்கூடிய இயக்குனராக வளர்ந்தார்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதனை தொடர்ந்து சுசி கணேசன் இறுதியாக தனது வெற்றி படமான திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். அதன் பின்னர் அவரது படங்கள் குறித்த எந்தவித அறிவுப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் இயக்க உள்ள புதிய படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்திற்கு வஞ்சம் தீர்த்தாயடா என தலைப்பு வைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். அதேபோல் படத்திற்காக ஒரு முன்னணி இசையமைப்பாளரிடம் சுசி கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை பொங்கல் பண்டிகை அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். தலைப்பை பார்க்கும்போது ரத்தம் சொட்ட சொட்ட ஒரு த்ரில்லர் படமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. இருப்பினும் படம் வெளியானால் தான் என்ன கதை என்பது தெரியவரும்.
சமீபத்தில் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் சுசி கணேசன் அவரது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். லீனா மணிமேகலை தவிர திருட்டு பயலே 2 படப்பிடிப்பு சமயத்தில் சுசி கணேசன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை அமலாபாலும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.