பள்ளி மாணவர்கள் வகுப்பில் நடனமாடுவது, ஆசிரியர் கண்டித்தால் அவரையே மாணவர்கள் தாக்குவது உள்ளிட்ட பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் அரசு பள்ளி மாணவன் 9ம் வகுப்பு மாணவிக்கு தாலிக்கட்டிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களுடைய பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டனர். இந்நிலையில் இரண்டு பேரையும் அழைத்து பேசிய தலைமை ஆசிரியர் இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனிடையே 9-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்க இருப்பதால் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.