பெட்ரோல் விலையால் எலெக்ட்ரிக் பைக் வாங்கிய நபர்.. சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டு தந்தையும் மகளும் பலி!

எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே வெடித்து உயிர் இழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் அருகே உள்ள சின்ன அல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் துரை வர்மா. இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.

இவருக்கு மோகனப் ப்ரீத்தி என்ற மகளும், அபினேஷ் என்ற மகனும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் துரைவர்மாவின் மனைவி உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தாய் இல்லாத குறை தெரியாத வகையில் துரை வர்மா பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். பெட்ரோல் விலையைக் கருத்தில் கொண்டு கடந்த திங்கள் கிழமை எலெக்ட்ரிக் பைக் ஒன்றினை துரை வர்மா வாங்கியுள்ளார்.

மேலும் நேற்று இரவு எலெக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டு வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மகள் துரை வர்மாவுடன் தூங்க, அபினேஷ் பக்கத்துத் தெருவில் உள்ள அத்தை வீட்டில் தூங்கியுள்ளான்.

இரவில் திடீரென பைக் வெடித்து தீப் பற்றி எரிய, அதனைத் தொடர்ந்து துரை வர்மா மகளுடன் தப்பிக்க நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் மற்றொரு வண்டியும் தீப்பற்றி எரிய வெளியே வரமுடியாத நிலையில் துரை வர்மா மற்றும் அவரது மகள் பாத்ரூமில் அடைந்துள்ளனர்.

அருகில் இருந்தோர் இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துவிட்டு உள்ளே சென்று பார்க்கையில் புகையால் மூச்சுத்திணறி தந்தையும், மகளும் உயிர் இழந்தது தெரிய வந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews