தற்போது இந்தியா முழுவதும் சூதாட்டங்களில் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் சூதாட்ட மோசடி அதிகமாகவே நிகழ்கிறது. இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடும் நபர்கள் ஒரு கட்டத்தில் அனைத்துப் பணத்தையும் இழந்து தற்கொலையில் தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று கூடிய சட்டப்பேரவையில் இந்த ஆன்லைன் சூதாட்டம் பற்றி விவாதம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் தான் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆன்லைன் சூதாட்டம் காரணமாக வங்கி ஊழியர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு அதிமுக எம்எல்ஏ பேசினார். சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம் கேள்விக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.