பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் தகவல். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி வளாகம் உள்ளது. இதில் 4பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில் வேலம்மாள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மாணவர்களை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தியது.
மேலும் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி தலைமையில் காவல்துறையினரும், திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை கமான்டோ படையினர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு உள்ளதா என தீவிர சோதனை நடைபெற்றது.
சுமார் 5மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு ஏதும் இல்லாததால் பள்ளிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் வெறும் புரளி என கூறி காவல்துறையினர் பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர். தனியார் பள்ளி வளாகத்தில் வெடுகுண்டு மிரட்டல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.