நாளை முதல் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் 100% முகக்கவசம் அணிய வேண்டும்” என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகளுடனான தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்…
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில சுகாதார பேரவையை கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததாகவும், மாநில சுகாதாரப் பேரவை இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
உலக அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்த அவர், இந்தியா மட்டுமில்லாமல் மீண்டும் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உயர்ந்து வருவதாக கூறிய அவர் தற்போது வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் 2 சதவீதம் ரேண்டம் பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு தொற்று ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கூறிய அவர் பதற்றம் அடைய வேண்டிய அளவிற்கு பாதிப்பு கிடையாது என்றும் நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம் என்பதால் முதலில் மருத்துவமனையில் இருந்து முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.