அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்க இருக்கும் நிலையில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மீது சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி 28-ஆம் தேதி வரையில் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. குறிப்பாக வேலூரில் அதிகபட்சமாக105 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தப்படியாக திருத்தணி மற்றும் திருச்சியில் 104 டிகிரி. மதுரை 103 டிகிரி பதிவாகியுள்ளது. ஈரோடு கரூர் தஞ்சை போன்ற பகுதிகளில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
மேலும், தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.