நடிகர் சங்க தேர்தலை எதிர்த்த மனு தள்ளுபடி… உச்ச நீதிமன்றம் அதிரடி!
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல் செல்லும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஏழுமலை என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்
அந்த, வழக்கு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
இதனால் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்பது தெளிவாகியுள்ளது
பின்னணி
நடிகர் விஷால் தலைமையிலான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பதவிக்காலம் கடந்த 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் தேர்தல் நடத்த திட்டமிட்ட போது
வாக்காளர் பட்டியிலில் இருந்து 61 உறுப்பினர்கள் எந்த காரணமும் இன்றி நீக்கப்பட்டிருப்பதாக அளித்த புகாரின்அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்குகளில் பதிவாளர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், தேர்தலை நடத்தவும் அனுமதித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டது.
அதன்படி, திட்டமிட்ட தேதியான ஜூன் 23ம் தேதி 2019ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஜூன் 23ல் நடத்தப்பட்ட தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக கூறி, நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி,
பதவிக்காலம் முடிந்த பிறகு தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டதும், அவர் மூலம் அறிவிக்கபட்டு, நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது எனவும் கூறி தேர்தலை ரத்து செய்து 2020 ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை தேர்தல் அதிகாரியாக நியமித்த உயர் நீதிமன்றம், புதிய வாக்காளர் பட்டியலை தயாரித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டார்.
மீண்டும் தேர்தல் நடைபெற்று முடியும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்த கவனிக்க உத்தரவிட்டு நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க கோரியும் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் சென்னை உயர்நீதிமன்ன டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் அமர்வு,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்தப்பட்ட தேர்தல் செல்லும் என்றும் அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை 4 வாரங்களில் எண்ணி முடிவுகளை அறிவிக்க தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
அதேநேரத்தில் எதிர்மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 3 வாரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர்.
