முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கிறார் டிகே சிவகுமார். முதல்வராகிறார் சித்தராமைய்யா..!

கர்நாடக மாநில முதல்வர் பதவியை டிகே. சிவகுமார் விட்டுக் கொடுத்து விட்டதாகவும் இதனை அடுத்து சித்தராமைய்யா  முதலமைச்சர் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சி தனிபெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா  ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்பட்ட நிலையில் சித்தராமைய்யா  சமீபத்தில் டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார்.

இந்த நிலையில் இன்று டிகே சிவகுமாரும் டெல்லி செல்ல இருந்த நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பெரும்பான்மையான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு சித்தராமைய்யாவுக்கு இருப்பதால் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து டிகே சிவகுமார் தனது முதல்வர் ஆசையை விட்டுக் கொடுத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு வலிமையான துறையை கொண்ட அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் பதவிக்கு உண்டான சிக்கல் தற்போது தீர்ந்து விட்டதாகவும் ஒருமனதாக முதலமைச்சர் பதவிக்கு சித்தராமைய்யா  தேர்வு செய்யப்படுவார் என்றும் இன்னும் ஒரு நாளில் அவர் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முழுமையாக நீங்கி விட்டதாக தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews