புருசன் பொண்டாட்டி சண்டைக்கு ஒரு திருவிழாவா?!


கணவன் மனைவி சண்டை வந்தா, அதை நாலு சுவத்துக்குள் முடிச்சுக்கனும்.  அதைவிட்டு அடுத்தவங்களுக்கு தெரியுற மாதிரி சண்டை போட்டா அது கேலிக்குரியதா மாறி, அவமானப்பட நேரிடும். இது சாதாரண மானிடருக்கு ஏற்படும் நிலை. அதுவே, உலகத்தை இயக்கி ஆளும் அம்மையப்பனுக்கிடையில் சண்டை வந்தா என்னாகும்?!  ஊரே திருவிழாக்கோலம் பூணும். அவங்க சண்டையிலிருந்து நமக்கு ஒரு பாடமும் கிடைக்கும். சரி என்ன சண்டை, அதிலிருந்து நமக்கு என்ன பாடம்ன்னு பார்க்கலாமா?!

பிருங்கி மகரிஷி சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லைன்ற நினைப்பு கொண்டவர். அதனால, சிவனை மட்டுமே வழிபடுவார். அருகிலிருக்கும் அம்பாளைகூட ஒரு பொருட்டா நினைக்க மாட்டார். இதனால், உள்ளுக்குள் பிருங்கி மகரிஷிமீது ஒருவித காழ்ப்புணர்ச்சியில் இருந்தார் அம்பாள்.  ஒவ்வொரு வருசமும் தை மாதம் 3ம் நாள் பிருங்கி முனிவருக்கு கிரிவலப்பாதையில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பது வழக்கம். தன்னை மதிக்காத பிருங்கிக்கு காட்சியளிக்கக்கூடாதுன்ற எண்ணத்துல அம்பாள் இருந்தாள். 

பிருங்கி மகரிஷிக்கு காட்சியளிக்கும் நாள் வந்ததும்   உடல் முழுக்க நகைகளைப் போட்டுக்கிட்டு, கிரிவலம் போகத் தயாராகிறார் அண்ணாமலையார்.  இதைக்கண்ட அன்னை உண்ணாமுலையம்மன்,  ‘ஊரெல்லாம் திருட்டு பயம். அதிலும் கிரிவலப்பாதை  காடுகளால் ஆனது. இப்படி பொட்டிக்குள் இருக்குற  நகைகளெல்லாம் போட்டுக்கிட்டு போகாதீங்க’ ன்னு கணவனுக்கு  அம்மன் அவரை தடுக்குறாங்க,  ஏதேதோ சொல்லி, மனைவியை சமாதானப்படுத்திட்டு   அண்ணாமலையார்,  நகையை போட்டுக்கிட்டு கிரிவலம் போய்ட்டார்.  

கிரிவலம் முடித்து, மறுநாள் காலையில் இறைவன் வரும்போது அம்பாள் அனுப்பிவித்த மாயையால்  நகைகள் திருடு போயிருந்தன. இதை சக்கா வச்சு. ‘ நான் சொன்னதை கேட்காததால பார்த்தீங்களா?!, நகைகள் திருடு போயிடுச்சு. சவரன் என்ன விலை விக்குதுன்னு சொல்லி, நகை இல்லாம வீட்டுக்குள்ள வராதீங்க’ ன்னு கடிஞ்சுக்கிட்டு உற்சவ மூர்த்தியின் அறையைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டாங்க. அருணாச்சலேஸ்வரர் குமர கோவிலில் தங்கி அன்றிரவை கழித்தார்.  மறுநாள் காலை, அம்பாளை, அண்ணாமாலையார்  சமாதானப்படுத்த, அண்ணாமலையாருக்கு துணையாய் தேவாதி தேவர்கள், அவரது பக்தர்களோடு, சுந்தரமூர்த்தி நாயனாரும் இறைவனுக்காக பரிந்து பேசுறாங்க. ஒருவழியா அம்மனும் சமாதானமாகி, பிரிஞ்சிருந்த குடும்பம் ஒன்னு சேர்ந்தது. 

இந்த ஊடலும், கூடலுமான அற்புத நிகழ்வை நாமும் கண்டு களிக்கனும்ன்னு, வருசா வருசம், திருவண்ணாமலையில் தைமாதம் 2ம்நாள், அதாவது மாட்டுப்பொங்கல் அன்னிக்கு கோலாகலமா கொண்டாடப்படுது.  உண்ணாமுலையம்மனிடம் , சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானப்படுத்த, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனின் உற்சவமூர்த்திகள் இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக   நகர, பக்தர்கள் சூழ திருவூடல் நிகழ்ச்சி நடைப்பெறும். அன்றிரவு, அண்ணாமலையார் கிரிவலம் செல்வார்.  மறுநாள் காணும் பொங்கலன்று காலை கோயிலில் உள்ள கருவறை மண்டபத்தில் உள்ள உற்சவமூர்த்தி சன்னதியில் மறுஊடல் என்ற உற்சவம் நடைபெறும்.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவிற்கு பின், திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுது. இந்த உற்சவம் மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாலை 6 மணிக்கு நடக்கும்.  இந்த உற்சவத்தில் கலந்துக்கிட்டா, பிரிஞ்சிருக்கும் கணவன், மனைவி ஒன்றுப்படுவர்.  கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். கணவன் செய்யுற எதையும் மனைவி காரண காரியமில்லாம் எதிர்க்க கூடாது. அதேப்போல, மனைவிக்கு பிடிக்காத எதையும் கணவனும் செய்யக்கூடாது. அதுக்காக, அவ சொல்றதை அப்படியே ஏத்துக்கக்கூடாது. காரண காரியம் ஆராய்ஞ்சி அவளுக்கு எடுத்து சொல்லி இருவருமா சேர்ந்து அந்த காரியத்தை செய்யனும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews