திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து பாகப்பிரிவினை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி குடும்பத்துடன் தேசியக்கொடியுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமரைப்பாக்கம் கூட்ரோடு அம்மணம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களது 11 வயது மகள் தியா, 7 வயது மகன் சாய்நாத் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் அழகேசனின் உடன் பிறந்த சகோதரர்கள் சொத்தை பிரித்து தருவதில் தாமதம் செய்வதாகவும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் அழகேசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது சொத்தை பிரித்து தர மறுக்கும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தீக்களிக்க முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சொத்து தகராறில் உடன் பிறந்தவர்கள் ஏமாற்றுவதாக கூறி குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை அடுத்து அவர்களை திருவள்ளூர் நகர போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்