கடந்த ஆண்டு சிறையிலேயே இறந்த கைதியை இந்த ஆண்டு விடுதலை செய்துள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளதை அடுத்து சிறை துறையின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என நெட்டிசன்கள் தங்கள் ஆவேசமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 27 கைதிகள் விடுவிக்கப்படுவதாக அம்மாநில சிறைத்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் விடுதலை செய்யப்படும் 27 கைதிகள் குறித்த பட்டியலை வெளியிட்ட நிலையில் அந்த பட்டியில் உள்ள ஒருவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார் என்று தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர் என்ற சிறையில் பத்திரம் ராய் என்பவர் கைதியாக இருந்தார் என்பதும் 93 வயதான இவ்வாறு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி சிறையில் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறுதிச்சடங்கும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பீகார் சட்ட அமைச்சகம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து நல்ல நடத்தையுடன் இருக்கும் கைதிகள் 27 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தது. மேலும் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ள நிலையில் அதில் 15வது பெயராக கடந்த ஆண்டு சிறையில் இறந்த கைதியான பத்திரம் ராய் என்பவரது பெயர் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் இறந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிய கைதி எப்படி இந்த ஆண்டு விடுதலை செய்யப்படுவார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகள் இந்த லட்சணத்தில் தான் வேலை பார்க்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து பீகார் மாநில சிறைத்துறை என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.