ரூ.2000 திரும்ப பெறுதல் விவகாரம்.. பொதுமக்கள் கண்டுகொள்ளாதது ஏன்?

இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்ததை அடுத்து வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியா வரை அரசியல் கட்சி பிரபலங்கள் மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் நாடு முழுவதும் பொதுமக்கள் இந்த அறிவிப்பை கண்டு கொள்ளவே இல்லை என்பதுதான் ஆச்சரியமான தகவலாகும்.

ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் 2000 ரூபாய் நோட்டை பார்த்து பல மாதங்கள் ஆகி உள்ளது என்றும் பயன்படுத்தி பல வருடங்கள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் மத்தியில் கிட்டத்தட்ட புழக்கத்தில் இல்லாத 2000 ரூபாய் நோட்டு செல்லாமல் போனால் என்ன? செல்லுபடி ஆனால் என்ன? என்ற எண்ணம் தான் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கருப்பு பணத்தையும் பதுக்கி வரி கட்டாமல் பதுக்கி கோடி கணக்கில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் பிரபலங்கள் தான் 2000 ரூபாய் நோட்டு திரும்பப்பெற்றது குறித்து அறிவிப்புக்கு பொங்கி எழுந்து வருகின்றனர். நேரடியாக இந்திய ரிசர்வ் வங்கியை விமர்சனம் செய்ய முடியாததால் மத்திய அரசையும் பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் மோடியையும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு பல்வேறு வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருந்தாலும் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும் என்ற அறிவிப்பு கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ள முதலைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 30 ஆயிரம் கோடி 40,000 கோடி என பதுக்கி வைத்திருக்கும் பிரபலங்களுக்கு அந்த நோட்டை மாற்றுவது எப்படி என்ற வழி தெரியாமல் திணறி உள்ளனர்.

ஆட்சியில் இருக்கும் சில அதிகாரம் மிக்கவர்கள் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் கரை கண்டவர்கள். ஆனால் ஆட்சியில் இல்லாத பிரபலங்கள் தொழிலதிபர்கள் திரையுலக பிரபலங்கள் 2000 ரூபாய் கருப்பு பணத்தை எப்படி மாற்றுவார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

2000 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் போது இது ஒரு கோமாளித்தனமான முடிவு என்று அனைவரும் கூறினர். கருப்பு பணம் பெருக்குவதற்குத்தான் இது வழி வகுக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கருப்பு பண முதலைகளை 2000 ரூபாய் நோட்டை பதுக்க வைத்து அதன் பின் தற்போது மீண்டும் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதில் தான் மோடியின் ராஜதந்திரம் இருக்கிறது என்ன பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் கடந்த முறை போல் இல்லாமல் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளி வந்திருக்கும் அறிவிப்பு தான் இந்த 2000 ரூபாய் நோட்டு திரும்பப்பெறும் அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews