நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும், உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது என தனது உரையை தொடர்ந்தார் கமல்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும், அரசியல் சேவைகளும் தொடர்ந்தன.
பிரச்சாரத்தைத் துவங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது.
ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்.
மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில்நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த ‘மருத்துவ விடுப்பில்’ உங்களோடு இணையம் வழியாகவும், வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்திற்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும்.
என் மண்ணுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கமலின் அறிக்கையை பார்த்த ரசிகர்கள், காலில் வலியுடனா இவ்வளவு வேலையும் செய்தீர்கள். உடல்நலம் முக்கியம் ஆண்டவரே. அறுவை சிகிச்சை முடிந்து நீங்கள் நல்லபடியாக வீடு திரும்ப இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.