வணிக சிலிண்டர் விலை, சமையல் எண்ணெய் உயர்வால் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் இட்லி, தோசை விலை 5 முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் படிப்புக்காகவும் வேலைக்காகவும் வந்து தங்கி இருப்பவர்கள் பலரும் உணவுக்காக பெரிதும் நம்பியிருப்பது நடுத்தர உணவுகள் தான். ஆனால் அண்மைகாலமாக இங்கும் உணவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி என தொடங்கி நெய் தோசை, வெங்காய தோசை என அனைத்து வகை உணவுகளும் 2 முதல் 10 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
எரிவாயு விலை உயர்வு, மளிகை பொருட்களின் விலை உயர்வு என பல்வேறு காரணங்களால் வேறுவழியின்றி உயர்த்தப்பட்டது என கூறுகிறார்கள் உணவக உரிமையாளர்கள்.
மேலும், விலை உயர்த்தியும் தங்களால் சமாளிக்க முடியவில்லை என உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் இனி உணவங்களில் சாப்பிடும் போது வயிறு நிறைகிறது இல்லையோ ஆனால் மக்களின் பணம் கரைந்து விடும் என்பது உறுதி.