திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் ரத்து…

கோடைக்காலத்தினை வரவேற்கும் விதமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை வசந்த உற்சவம் பத்து நாட்களாக கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு வருகிற ஏப்.26-ந் தேதி தொடங்கி மே மாதம் 6-ந் தேதி வரை என 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். விழாவின் நிறைவு நாளன்று மன்மத தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் இந்த ஆண்டு சித்தரை வசந்த உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் கூறுகையில், சித்திரை வசந்த உற்சவம் நடத்துவதற்கு சிவாச்சாரியார்கள் மட்டுமின்றி கோவில் ஊழியர்கள் உள்பட பக்தர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. தொடர்ந்து கோவிலில் சாமிக்கும், அம்மனுக்கும் 6 கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றார்.