சாராயம் விற்பது அரசின் வேலையல்ல, தனியாரிடம் ஒப்படையுங்கள்: கமல்ஹாசன்

நேற்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஒருசில அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அரசு நடத்தி வரும் சாராய கடைகளை தனியாரிடம் ஒப்படையுங்கள் என கமல்ஹாசன் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார். குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று. குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.