மே 7-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்தியா அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக, இந்திய இராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில், குறிப்பாக சியால்கோட் மற்றும் லாகூர் பகுதிகளில் உள்ள விமான பாதுகாப்பு ராடார்கள் மற்றும் அமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் Integrated Counter-UAS Grid மற்றும் ரஷியாவின் S-400 ‘ட்ரையூம்ஃப்’ ஏர்டெபன்ஸ் அமைப்புகள் மூலம் பாகிஸ்தான், இந்தியாவின் பல்வேறு நகரங்களை தாக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. மேலும் லாகூர் பகுதியில் உள்ள விமான பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்யப்பட்டது.
இந்தியாவின் குப்ப்வாரா, பரமுல்லா, உரி, பூஞ்ச், மேந்தர், ராஜௌரி உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இந்தியா பதிலடி கொடுக்க துவங்கியது.
பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகளுடன் தாக்கும் முயற்சி மேற்கொண்டது. அவன்டிப்புரா, ஸ்ரீநகர், ஜம்மு, பத்தான்கோட், அமிர்தசர், லூதியானா, பாட்டிந்தா, உள்ளிட்ட நகரங்கள் இலக்காக இருந்தன. ஆனால் இந்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்ததாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்ததோடு, லாகூரில் உள்ள விமான பாதுகாப்பு அமைப்பையும் இந்தியா செயலிழக்க செய்துள்ளதால் இது ’ஆபரேஷன் சிந்தூர் 2.0’ என கூறப்படுகிறது. இப்போது கூட இந்தியா, போரை விரும்பவில்லை என்றும், ஆனால் பாகிஸ்தான் தாக்கினால் பலமடங்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் இந்தியா கூறியுள்ளது.