எங்கெல்லாம் தீமை தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையில் கிருஷ்ணர் சொல்லி இருக்கார். கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே விஷ்ணு பகவான் பல அவதாரங்களை எடுத்துள்ளார். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் ராம அவதாரம் உயர்ந்ததாய் சொல்லப்படுகிறது. ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என மனித குலத்திற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டியவர். சிறந்த மகனாய், சகோதரனாய் எப்படி வாழவேண்டுமென அதன்படியே வாழ்ந்தும் காட்டியவர். அப்பேற்பட்ட ராமன் அவதரித்த தினமான இன்று ராமநவமியாய் கொண்டாடப்படுகிறது. ராம நவமியான இன்று ராமனை நினைத்து வழிபடும்போது சொல்ல வேண்டிய ராம காயத்ரி மந்திரம் இதோ..
ராம காயத்ரி மந்திரம்…
ஓம் தஸரதாய வித்மஹே
ஸீதாவல்லபாய தீமஹி
தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்’.
பொருள்..
தசரதனின் மகனை அறிந்து கொள்வோம். சீதாதேவியின் கணவன் மீது தியானம் செய்வோம். அந்த ஸ்ரீராமன் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அருள் செய்வான் .
மந்திரம் சொல்லும் முறை…
தினமும் ராம நாமத்தைச் சொன்னாலே நற்பலன்கள் ஏற்படும். அதிலும் இந்த ராம காயத்ரியை சொல்வதால் சிறப்புமிக்க பலன்களைப் பெறலாம். பூஜைகள் முடித்து, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வருவதால், ஆபத்து காலங்களில் நன்மை விளையும். புத்திரப்பேறு உண்டாகும். பகை விலகும். ஒழுக்கமாக வாழ வழி வகுக்கும். எண்ணிய வாழ்வு அமையும். பாவங்கள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். தத்துவார்த்தமான ஞானம் பெறலாம்.
ஜெய் ஸ்ரீராம்!!