முருகனுக்கு நேர்த்திகடனாய் காவடி எடுப்பது எதனால்?!

ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை, வாகாசி விசாகம், சஷ்டி என முருகனுக்கு முக்கிய விரத தினங்கள் தமிழ் மக்களால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடனாய் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். தைக்கிருத்திகை, தைப்பூசத்தன்று பழனியிலும், ஆடிக்கிருத்திகையன்று திருத்தணியிலும், வைகாசி விசாகத்தில் திருச்செந்தூரிலும் காவடி எடுப்பது வழக்கம்.

e995d3b88f5df0a879bb8400c246368e

காவடி பிறந்த கதை….

அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகன் எழுந்தருளும் கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளை கொண்டுவரும்படி பணித்தார். அவ்வாறே, இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்குமாறு ஒரு கம்பில் காவடியாய் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான். இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில்(பழனி) நிலைப்பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பிய முருகப்பெருமான், இடும்பனை வழிமாற செய்தார். இடும்பன் வழித்தெரியாமல் திகைத்தபோது முருகன் குதிரைமீது செல்லும் அரசனைப்போல் தோன்றி, இடும்பனுக்கு வழியை கூறி, இடும்பனை திருவாவினன்குடியில் சற்று ஓய்வெடுத்து செல்லுமாறு கூறினார். 

43b28d6a244bd8b9672270490aeaf6d0

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து, பின் புறப்படலாம் என காவடியை தூக்க, காவடியை தூக்கமுடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை இப்போது தூக்க முடியாத காரணத்தை ஆராய்ந்தபோது , சிவகிரியின்மீது ஒரு சிறுவன் கோவனத்துடனும், கையில் தண்டத்துடனும் நிற்பதை கண்டு, மலையிலிருந்து இறங்குமாறு பணித்தான். ஆனால், சிறுவனோ, இம்மலை எனக்கே சொந்தம் என சொந்தம் கொண்டாடினான். கோபமுற்ற இடுமபன் சிறுவனை தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் விழுந்தான்.

02d1372d29f87d257fbbcf65aa0cfb2a

இதை உணர்ந்த அகத்தியரும், இடும்பனின் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட இடும்பனுக்கு அருளி, அவனை உயிர்பித்து தன் காவல்தெய்வமாகவும் உயிர்பித்தார். அப்போது இடும்பன், தன்னைப்போல காவடியேந்தி பால், சந்தனம், மலர், இளநீர் போன்ற அபிஷேகபொருட்களை கொண்டு வந்து உம்மை வணங்குபவர்களது பிணி நீங்க அருள்செய்ய வேண்டுமென வரம் கேட்டான். அவ்வாறே முருகனும் அருளினார். அன்றுமுதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும், துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கிறது, மனிதனாய் பிறந்தவன் இவ்விரு துன்பங்களை தாங்கித்தான் ஆகவேண்டும். இவ்விரண்டையும் எளிதாய் சுமக்க கடவுள் பக்தி என்னும் மையக்கோல் உதவுது என்பது இதன்மூலம் புலனாகிறது. இறைசக்தியும், இயற்கை சக்தியும் எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றிவிட்டால் தன்னிம்பிக்கை தானே வந்து நம்வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள செய்யும். உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள ஆடிக்கிருத்திகை நன்னாளில் முருகன் பேரருளை நாடி வழிப்படுவோம்.

ஓம் சரவண பவ!!

https://rajiyinkanavugal.blogspot.com/2018/08/blog-post_5.html
புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews