தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது முல்லை பெரியாறு அணை விவகாரம். இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் கேரள அரசு மாறி மாறி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு கண்டிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி முல்லைப் பெரியாறு நீரை திறப்பது பற்றி அடிக்கடி இடைக்கால மனு தாக்கல் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இருமாநில அரசுகளும் வெளியில் இருக்கும் நெருக்கடிகளை நீதிமன்றத்தில் காட்டக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முல்லைப்பெரியாறில் எப்போது நீரைத் திறந்துவிட வேண்டும் என்பது கண்காணிப்பு குழுவின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
முல்லை பெரியாறு நீரை திறந்து விடுவது பற்றிய புகார்களை கண்காணிப்புக் குழுவிடம் தெரிவிக்க கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. புகார் குறித்து கண்காணிப்பு குழு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான பிரதான வழக்கு ஜனவரி 11 ஆம் தேதியில் விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.