பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம். விருத்தாச்சலம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பதிலளித்துள்ளார்.
விருத்தாசலம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சக்தி நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி வீட்டிற்கு சென்ற பின் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரை அலுகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்ரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30-வது வார்டு உறுப்பினராக உள்ள என்பதை அறிந்த உடனே அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசை பொருத்தவரை செய்தி கேள்விப்படவில்லை தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்த்தேன் என கூற தயாராக இல்லை. செய்தி அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக கைது செய்து அதற்கு பிறகு சொல்ல வேண்டும் என தகவல் அளித்திருந்தேன்.
அந்த அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபடுவோர் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுகிறோம். அந்த வகையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் துரிதமாக எடுப்போம்”, என்றார்.