இதுக்கு மட்டும் ஒத்துழைப்பு கொடுங்க… பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு திமுக அமைச்சர் விடுத்த வேண்டுகோள்…!
தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்துவதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை வந்தவாசி வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்க அரசு முன்வருமா? எனவும் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுக்கும் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், அவ்வாறு ஒத்துழைப்பு தந்தால் புதிய தொழிற் பூங்காக்களை அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் கூறினார்.
மேலும், செய்யாறு சிறப்புப் பொருளாதார மண்டலத்தை பொறுத்தவரை, 2016-ல் தனியாரால் துவக்கப்பட்டதாகவும், அதை விரிவாக்கம் செய்வது பற்றி சூழலைப் பொறுத்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
