தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மட்டும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கு முன் 2ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 25ஆக அதிகரித்துள்ளது என்றார்.
ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றும், முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்
என்றும் எச்சரித்த மா.சுப்பிரமணியன் காய்ச்சல் பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் மற்றவர்களுக்கு பரவாது தடுக்க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.