கடந்த 2020-21 ஆண்டில் 113 காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் தகுதி பெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரம் தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினர் மற்றும் இந்த கல்லூரிகளில் வசூல் செய்த பணம் எவ்வளவு என்பதை விசாரிக்க சிபிசிஐடிக்கு மாற்ற உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ மேற்படிப்பு முன்னாள் செயலாளர் செல்வராஜன் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முறைகேடுகளை விசாரிக்க பல தடைகள் வந்ததால் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை என சிபிசிஐடி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது. இதனால் முன்னாள் செயலாளர் செல்வராஜனின் ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த உத்தரவினை எதிர்த்து முன்னாள் செயலாளர் செல்வராஜன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீடு விசாரணை இன்று அமர்வுக்கு வந்தது.
அப்போது முன்னாள் செயலாளர் செல்வராஜன் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா காலகட்டங்களில் நடத்தப்பட்ட இரண்டு கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால் தகுதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும் இந்த முடிவு தனிப்பட்ட முறையில் செல்வராஜன் தலைமையில் எடுக்கப்பட்டது இல்லை எனவும் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள் அரசு ஒதுக்கீடு செய்த இடங்களுக்கு கலந்தாய்வு நடத்திய தேர்வு குழு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு ஏன் நடத்தவில்லை என கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், இந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என விளக்கம் அளிக்கும் படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 21க்கு தள்ளிவைக்கப்பட்டது.