மாதவிலக்கான பெண்கள் இறைவழிபாட்டில் ஈடுபடலாமா?!

தெய்வத்துக்கும் மேலாக போற்றப்படுபவள் தாய். ஆனாலும்,இந்து மத மரபுகளின்படி மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் மாதவிலக்கான நாட்களில் வீட்டிலுள்ள பூஜையறையிலோ அல்லது ஆலயங்களிலோ நுழைய அனுமதிக்கப்படுவதில்லை..

17cca3657e298757e0f0a66dc242267e

சுமார் 30வருடங்களுக்கு முன்புவரைகூட மாதவிலக்கான பெண்களை தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கென தனி தட்டு, டம்ப்ளர் கொடுக்கப்படும். பாய் மட்டுமே கொடுப்பார்கள். அரிசி, தானியங்கள், பூஜை பொருட்கள், பணம் மாதிரியான பொருள்களைத் தொடுவதற்கு கூட அனுமதிக்கப்பட்டதில்லை. இப்படி பெண்கள் நடத்தப்பட வேதங்களில் ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது.

இந்திரன் ஒரு பிராமணனை கொன்றதால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. செல்வ செழிப்போடும் அழகாகவும் இருந்த தேவர்களின் அரசனான இந்திரன் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால் முகம் கறுத்து பார்க்கவே கோரமாக காட்சி அளித்தான். செல்வம் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு அலைந்தான் தோஷத்திலேயே கொடிய தோஷம் பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷத்தைப் பெற்றவனுக்கு எவ்வித பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதுதான் இதற்கான தண்டனை. இந்த தோஷத்தால் படும் வேதனையை கண்டு யாராவது அந்த தோஷத்தை யாராவது விரும்பி ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அழகு, செல்வம் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு அலைய யார்தான் விரும்புவார்கள்?!

பூமாதேவியைச் சந்தித்த இந்திரன் எனது பிரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக்கொள்ளேன் என்று அழுதான். தோஷம் முழுவதும் எடுத்துக் கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு சந்தோஷம் கிடைக்காது. ஒரு பகுதியை வேண்டுமானால் எடுத்து கொள்கிறேன். பதிலுக்கு நீ ஒரு வரம் தர வேண்டும். பூமி பிளந்தால் மீண்டும் சேரும் வரம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்படி வாங்கிய தோஷத்தால் பாதிக்கப்பட்ட பகுதிதான் பாலைவனமாகவும், தரிசு நிலங்களாகவும் மாறியதாக சொல்வார்கள். அடுத்ததாக மரங்களிடம் சென்று பிரம்மஹத்தி தோஷத்தின் ஒருபகுதியை எடுத்துக்கொள்ளுங்கள் என்றான் இந்திரன். நாங்கள் வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்க்கும் வரம் கொடு என்று கேட்டு அவைகள் தோஷத்தின் சிறிய பகுதியை வாங்கிக் கொண்டன. அந்த தோஷம்தான் மரங்களில் கோந்தாக வழிகிறது.

இந்திரனிடம் இன்னும் பாதி பிரம்மஹத்தி தோஷம் இருந்தது. இந்திரன் ஸ்தரி ஸம்ஸாதம் என்னும் பெண்கள் மாநாட்டிற்கு சென்று அங்கிருந்த பெண்களிடம் தன்னுடைய தோஷத்தை எடுத்துக் கொள்ளும்படி வேண்டினான். உனக்கு உதவ விரும்புகிறோம்,பதிலுக்கு எங்களுக்கு என்ன தருவாய்?என அங்கிருந்த பெண்கள் கேட்டார்கள். என்ன வேண்டுமானாலும்தருகிறேன் என்று சொன்னான் இந்திரன். நாங்கள் பிரசவிக்கும்வரை எங்கள் கணவருடன் தேக சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். அப்படியே ஆகட்டும் என்ற இந்திரன்.எஞ்சியிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை பெண்களிடம் கொடுத்து அவன் பழைய உருவத்தைப் பெற்றான். அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என வேதங்கள் சொல்கின்றது.

சமஸ்கிருதத்தில் இந்த மூன்று நாட்களை பகிஷ்டை என சொல்கின்றார்கள். பகிஷ்டை என்றால் வெளியில் வை.. விலக்கி வை என பொருள். நம் முன்னோர்கள் சொல்லியதுபடி பார்த்தால்,அந்த மூன்று நாட்களில் பெண்கள் உடலளவிலும்,மனதளவிலும் பலவீனமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். இந்த சக்திகள் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை பலவீனமாக மாற்றும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உங்கள் குலதெய்வம் பெண் கடவுள்களாக இருந்தால் நீங்கள் கோவிலுக்கு செல்லலாம். பூஜைக்குரிய சடங்குகளில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி நின்று வழிபட்டு வரலாம். ஆனால் இத்தகைய நிலை தேவையில்லை என்பதால் தான் கோயில்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அதே உங்கள் குலதெய்வம் ஆண் கடவுள்களாக இருந்தால் உங்களுக்கு பிரச்னைகள் நிச்சயம் தோன்றும். உங்கள் உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் கோயில்களில் உள்ள அதீத சக்தியை தாங்கும் நிலையில் இருக்காது.மேலும் சிவன் அல்லது முனீஸ்வரர் ஆலயமாக இருந்தால்,அந்த இடம் நெருப்புத்தன்மை உள்ள இடமாக கருதப்படும்.அப்போது உங்கள் உடலில் உள்ள வெப்பமும், அந்த இடத்தின் வெப்பமும் அதிகரித்து அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்படும். நீங்கள் செல்லும் கோவில் காடுகள், மலைகள் சுற்றியுள்ள இடத்தில் உள்ள ஆலயத்தில் இருந்தால் அருகிலுள்ள விலங்குகள் ரத்தவாசனையால் ஈர்க்கப்படும். விலங்குகளை ஆக்ரோஷம் கொள்ள வைத்து அந்த ரம்மியமான சூழ்நிலையை கெடுக்கும்.

விஞ்ஞானப்படி மாதவிடாய் நாட்களில் வயிறு வலி, முதுகுவலியால் அவதிப்பட்டு உடல் சோர்வினால் அவதிப்படுவீர்கள். ரத்தப்போக்கு காரணமாக ரத்த சோகை ஏற்படலாம். மருத்துவ வசதி இல்லாத காலங்களில் மாதவிலக்கான பெண்கள் துணி, அல்லது சாம்பல் கொண்டு ரத்தக்கசிவு வெளியில் தெரியாமல் தடுத்தனர். இம்மாதிரியான சூழலில் வெளி இடங்களுக்கோ அல்லது கோவிலுக்கோ சென்றால் ரத்தக்கசிவு மற்றவர் கண்களுக்கு தென்பட்டு அசிங்கப்பட நேரிடும். அடிக்கடி துணிகள் மாத்த வேண்டிய சூழலால்தான் வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்த்தனர். கறைபடும் டென்ஷன், துணி மாற்றும் அவஸ்தை, வலி இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் எதிர்கொள்ளும்போது முழு ஈடுபாட்டுடன் பெண்கள் சுவாமியை தரிசனம் செய்யவோ, பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடவோ முடியாது என்பதால்தான் பெண்களை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது..

உடல்ரீதியாக எந்த நிலையில் இருந்தாலும் அது கடவுளிடமிருந்து நம்மை தள்ளி வைக்காது. பூஜை, புனஸ்காரம், வழிபாடெல்லாம் மனம் அமைதி கொள்ளத்தானே தவிர வேறொன்றுமில்லை. எந்த நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனிடம் மனதை செலுத்துங்கள். மாதவிலக்கு என்னும் இயற்கை சுழற்சியால் உங்களை இறைவனிடமிருந்து ஒதுக்கி வைக்கவில்லை. உங்கள் நலம் கருதி ஒதுங்கியிருங்கள் என்றே வலியுறுத்தப்படுகிறது ..

என்னதான் நாகரீகம் வளர்ச்சி கண்டாலும் சில விசயங்கள் மாறுவதற்கில்லை. அதில் மாதவிலக்கு நாளில் கோவிலுக்கு போகக்கூடாது என்பது மாறுதலுக்கு உள்ளாகவில்லை.. இனிவரும் காலங்களில் இது மாறலாம்… அப்போது கோவிலுக்குள் செல்லலாம். அதுவரை பூஜை, புனஸ்காரங்களிலிருந்து தள்ளியிருந்து மனதிற்குள் இறைவனை வேண்டுக்கொள்வோம்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews