கடவுளை நெருங்கும்போது நமக்கு என்ன தெரிகிறது? கண்ணனுக்குப் பிடித்த உணவு எது தெரியுமா?

கடவுள் யார்? எப்படிப்பட்டவர்? அவரிடம் நாம் என்ன கேட்க வேண்டும்? எதைக் கேட்டாலும் தருவாரா? எப்படி தருவார் என்ற கேள்விகள் ஆரம்ப காலத்தில் பக்தனுக்கு வந்து போவதுண்டு. ஒரு கட்டத்தில் அவனுக்கே அது குறித்த பதில் கிடைத்து விடும்.

அப்போது அவன் பக்குவ நிலைக்கு வருகிறான். அந்த நேரத்தில் கடவுளை எப்படி வேண்டுவது என்று பார்க்கலாம். அந்த வகையில் இன்றைய மார்கழி 27 (11.01.2023) நாளில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவைப் பாடல்களையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

இன்று 7வது நாள்திருப்பள்ளியெழுச்சிப் பாடல். அது பழச்சுவையென அமுதென என்று தொடங்குகிறது.

Markali 27
Markali 27

இந்தப்பாடலில் இறைவனைப் பற்றி வர்ணிக்கிறார் மாணிக்கவாசகர். அடியார்களை ஆட்கொண்டு வரும் இறைவனே என்கிறார். கடவுளிடம் போய் அது வேணும்…இது வேணும்னு கேட்கிறோமே அது சரியா என்று குழப்பம் வரலாம். கேட்கலாம் அதில் தவறு ஏதுமில்லை.

அதுவும் பிரார்த்தனை தான். ஒரு கட்டத்திற்கு மேல் ஒரு பக்குவம் வந்து விட்டால் நமக்கே தெரிந்து விடும். இறைவன் நமக்கு எதைக் கொடுக்கணும்னு தீர்மானம் செய்து இருக்கிறதோ அது நிச்சயமாகக் கொடுத்து விடுவார். அப்படின்னா நாம எதைக் கேட்கணும் என்று தெரிய வேண்டும்.

எனக்கு எது நல்லதோ அதைக் கொடுன்னு கேட்பது தான் சிறப்பு. இறைவன் தாய் போன்றவன். எனக்கு என்ன வேணுமா அதைக் கொடும்மா என்று கேட்போமா. இல்லை. அதற்குப் பிடித்த பொருள்களைத் தான் அந்தக் குழந்தை கேட்கும். தாய் நம்மை ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அதை வாங்கித் தராமல் இருப்பாள்.

குறிப்பாக ஐஸ்கிரீம் அடிக்கடி வாங்கிக் கொடுத்தால் சளி பிடித்து விடும். அது போல தான் இறைவனும் நமக்கு எது நல்லதோ அதை இறைவன் நிச்சயமாகத் தந்தருள்வார். தவறான வழியில் என்னை விடாதே. நல்ல வழியில் வச்சிக்கோ. தீய வழியில் செல்கையில் என்னைத் தடுத்து விடு என்று இறைவனிடம் சுந்தரமூர்த்தி நாயனார் வேண்டுகிறார்.

நாம் எதை வேண்டுகிறோமோ அதை முழுவதுமாகத் தரக்கூடியவர் இறைவன். நம் பிரார்த்தனை முழுமையாக புரிய வைக்கும் வகையில் அமைய வேண்டும். இறைவனை அடைவதும் அவ்வளவு சுலபமானது அல்ல. இங்கு அது பழத்தின் சுவை.

இது தேனின் சுவை என ஒவ்வொன்றாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. கடவுளை நெருங்கும்போது தான் தெரிகிறது. கடவுளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் தேவர்களுக்கே இது சாத்தியமற்றதாகி விடுகிறது.

அவர்களுக்கும் இறைவன் அரிய பொருள். நாங்க இப்போது உன் முன்னால் நிற்கிறோம். எங்களை எப்படி ஆட்கொள்ள வேண்டுமோ அவ்வண்ணமே ஆட்கொண்டு அருளுக என இந்தப் பாடலில் சிவபெருமானை மாணிக்கவாசகர் வேண்டுகிறார். இது தான் சரணாகதி. நிஜமான பக்தி.

ஆண்டாள் இன்றைய திருப்பாவைப் பாடலில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா என்று தொடங்குகிறார்.

Thiruppavai 27
Thiruppavai 27

கிருஷ்ணரை வணங்கக்கூடிய நிறைய செய்திகளை இந்தப் பாடலில் சொல்லியிருக்கிறார். நாம் பலனடைய கிருஷ்ணரிடமிருந்து சில பொருள்களைப் பரிசாக பெற வேண்டுகிறார்.

கணவரிடம் தான் நாம் உரிமையோடு சில பொருள்களை வாங்கித் தருமாறு கேட்க முடியும். அதே போல தனக்குப் பிடித்த நாயகனான கிருஷ்ணரிடம் நாங்கள் உங்களுக்காக விரதம் இருக்கிறோம், பாவை நோன்பு இருக்கிறோம். எங்களுக்காக சன்மானமாக ஒன்று கொடு என்று கேட்கிறார்.

அந்தக்காலத்தில் பெரியவங்க பண்டிகை நாள்களில் குழந்தைகளுக்கு பரிசு, பொருள், இனிப்பு, காசு என வழங்குவர். அது பெரிதாகத் தெரியும். அது போல இங்கு கெட்டவர்களை ஒழித்து நல்லவர்களோடு இணங்கச் செய்கிறார் கிருஷ்ணர். எங்களுக்குத் தேவையான அணிகலன்களை பரிசாகத் தா. அதனுடன் சேர்த்து நல்ல புத்தாடைகளைப் பரிசாகக் கொடு.

உனக்குப் பிடித்த பால்சோறுடன் நெய் கலந்த உணவை எங்களுடன் அமர்ந்து நீயும் சாப்பிட வா என அழைக்கிறார் ஆண்டாள் நாச்சியார். அதிலும் நெய்யானது முழங்கையில் வழிந்து ஓடுமளவிற்கு அதிகமாக இருக்க வேண்டுமாம். இந்த உலக வாழ்க்கைக்கு அருள் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வமும் வேண்டும் என்று நாச்சியார் வேண்டுகிறார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews