முருகன் கோவில்களில் காவடி எடுக்கும் வழக்கம் ஏற்பட்டது எப்படின்னு தெரியுமா? பழனி மலை உருவான அதிசயம்

திருஆவினன்குடி, தென்பொதிகை எனப்படுவது பழனி. அறுபடை வீடுகளில் 3ம் படைவீடு இது. இதன் பழங்காலப் பெயர் திருஆவினன்குடி. இதில் திரு என்பது லட்சுமியையும், ஆ என்பது காமதேனுவையும், வினன் என்பது சூரியனையும், கு என்பது பூமாதேவியையும், டி என்பது அக்னிதேவனையும் குறிக்கிறது.

Palani Malai2
Palani Malai2

இந்த ஐவரும் முருகப்பெருமானை இந்த மலையில் வைத்துப் பூஜித்ததால் இந்த இடத்திற்கு திருஆவினன்குடி என்று பெயர் வந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ள நகரம் பழனி. இங்கு அருள்புரியும் முருகப்பெருமான் தண்டாயுதபாணி என்றும் குழந்தை வேலாயுதம் என்றும் அழைக்கப்படுகிறார்.

பழனிமலை உருவான வரலாறு

ஞானப்பழத்திற்காக அம்மா, அப்பாவிடம் கோவித்துக்கொண்டு இந்த மலைக்கு ஆண்டி கோலத்தில் குழந்தையாக வந்தார் முருகப்பெருமான். பிற்காலத்தில் ஒளவையார் முருகரை நீயே ஞான வடிவானவன் என்ற பொருள் கொண்ட பழம் நீ என புகழ்ந்தார். அதுவே பிற்காலத்தில் பழனி ஆனது.

பழனியோட மலைக்குச் செல்லும் வழியில் இடும்பனோட சன்னதி இருக்கும். இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜை செய்த பிறகு தான் முருகருக்குப் பூஜை செய்வாங்க.

முன்னொருகாலத்தில் அகத்திய முனிவர் தனது சீடன் இடும்பாசுரனை கைலையில் சென்று அங்குள்ள கந்தமலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் எனக்குக் கொண்டுவா. நான் வழிபடவேண்டும் என்று கட்டளையிட்டார்.

இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்ததால் தனது மனைவி இடும்பியுடன் கைலை மலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இருகுன்றுகளையும் பெரிய பிரம்ம தண்டத்தில் காவடியாக இருபுறங்களிலும் கட்டித் தொங்கவிட்டு தோள்மீது சுமந்து கொண்டு வந்தார்.

திருவாவினன்குடியில் இந்த குன்றுகளை நிலைபெறச்செய்ய குதிரை மீது அரசனாக வடிவெடுத்து வந்தார். செல்லும் வழி தெரியாது தவித்த இடும்பாசுரனை முருகப்பெருமான் திருவாவினன்குடிக்கு வந்து சற்று இளைப்பாறிச் செல்லும்படி கூறினார்.

Idumpasuran
Idumpasuran

அப்படியே இடும்பனும் காவடியை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறினார். மீண்டும் காவடியைத் தூக்க முடியாமல் கஷ்டப்பட்டார். அப்போது சிறுவன் ஒருவன் ஆண்டியாய் கோவணத்துடன் கையில் ஒரு சிறு தண்டையையும் கொண்டு குன்றின் மீது நின்று கொண்டு இருப்பதைக் கண்டார்.

இடும்பன் அந்த சிறுவனை குன்றிலிருந்து இறங்குமாறு சொன்னார். ஆனால் அந்த சிறுவனோ அந்தக் குன்று தனக்கே உரியது என்றான். இதைக் கண்டு கோபம் கொண்ட இடும்பன் சிறுவனைத் தாக்க முடியாமல் மயங்கி விழுந்தான். கோபம் கொண்ட இடும்பி முருகப்பெருமானை வேண்ட இடும்பனுக்கு மீண்டும் உயிர்கொடுத்தார். அன்று முதல் இடும்பனுக்குக் காவல் தெய்வமாக அருளும் பேற்றைக் கொடுத்தார் முருகன்.

இடும்பனைப் போல சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருள்களைக் காவடி எடுத்து சன்னதிக்கு வருவோருக்கெல்லாம் அருள்பாலிப்பதாக வாக்களித்தார்.
அன்று முதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. மற்ற படைவீடுகளுக்கு இல்லாத அற்புத சக்தி இந்த பழனி மலைக்கு உண்டு.

போகர் சித்தர் மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி நவபாஷாண முருகர் சிலையை செய்துள்ளார். சக்தி வாய்ந்த இந்த சிலை இங்கு மட்டுமே உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews