மகரம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

நீதி நேர்மை தர்மம் நியாயத்தை பின்பற்றும் மகர ராசி அன்பர்களே!

கடந்த ஒரு வருடமாக ஜென்மச் சனியால் பல்வேறு விதங்களில் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் உங்களுடைய ராசிக்கு 4-ஆம் இடத்திற்கு ராகு பகவான் 10-ம் இடத்திற்கு கேது பகவானும் பெயர்ச்சி ஆகிறார்கள். இது உங்களுடைய ஜென்மச் சனியால் ஏற்படக்கூடிய துயரங்களை குறைப்பதற்கு உரிய காலம் ஆகும்.

ஜென்ம சனி காலத்தில் யாராக இருந்தாலும் அசைவ உணவை கண்டிப்பாக கைவிட வேண்டும். மது மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். அதன்பிறகு சனிபகவானின் குரு என்று போற்றக்கூடிய காலபைரவ பெருமானை தினமும் ஜெபிக்கவேண்டும். இப்படி செய்வதன் மூலமாக சனிபகவான் பெருமகிழ்ச்சி அடைந்து ஜென்மச் சனியால் ஏற்படக்கூடிய துயரங்களை குறைத்து விடுவார்.

இப்பொழுது வந்திருக்கும் ராகு கேது பெயர்ச்சியால் தங்களுக்கு நன்மை தரக்கூடிய இடத்திற்கு கேது பகவான் வந்திருக்கிறார். அதிக அலைச்சல் தரக்கூடிய இடத்திற்கு ராகுபகவான் வந்திருக்கிறார். எனவே ராகு பகவானுடைய அதிதேவதை என்று அழைக்கக்கூடிய துர்க்கை முதலான உக்கிரமான பெண் தெய்வங்களை நீங்கள் தினமும் வழிபடுவது நன்று. அல்லது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரக்கூடிய ராகு கால நேரத்தில் உங்கள் ஊரில் உள்ள உக்கிரமான பெண் தெய்வம் ஆலயம் சென்று பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு காலம் அமைந்திருக்கிறது. அதில் உங்கள் ஊரிலுள்ள உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு சென்று போனை அணைத்து வைத்து விட்டு உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை மனப்பூர்வமாக நீங்கள் அந்த உக்கிரமான பெண் தெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அந்த தெய்வம் உங்களுடைய வேதனைகளையும் கஷ்டங்களையும் குறைத்து உங்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றும்.

அதுவும் முடியாதவர்கள் பின்வரும் சம்கார பைரவர் மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வரை ஜெபம் செய்து வாருங்கள். ராகு பகவானின் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆவார். அவருடைய அருளைத் தரும் மந்திரத்தை இங்கே தந்திருக்கிறோம். கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை கைவிட்டு இருக்க வேண்டும் மற்றும் மது மற்றும் போதைப் பொருட்கள் சாப்பிடுவதை விட்டு இருக்க வேண்டும். அப்படி கைவிட்டவர்கள் மட்டும் இந்த மந்திரத்தை தினமும் ஒரு மணி நேரம் வரை ஜெபம் செய்தால் போதும்.

ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டீ ப்ரசோதயாத்.

கலியுகத்தில் ராகு பகவானின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. திடீரென்று ஒருவரை மிகப் பெரும் செல்வந்தராக மாற்றுவதும், திடீரென்று பரம்பரை செல்வந்தரை பரம ஏழையாக மாற்றுவதும், திடீரென்று உலகப் புகழை தருவதும், திடீரென்று மிகப்பிரம்மாண்டமான அளவிலான அவமானத்தை தருவதும் ராகு பகவானின் பொறுப்புக்கள் ஆகும்.

இருந்தபோதிலும் ராகு பகவான் தன்னுடைய சொந்த விருப்பத்தின்படி இவ்வாறு செய்வது கிடையாது. நம் ஒவ்வொருவருடைய போன நான்கு முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அவர் இந்த புகழ் அல்லது அவமானம், செல்வவளம் அல்லது மிகுந்த வறுமையை வழங்குகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். திருந்த வேண்டும், மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஓரளவாவது பக்தியாக இருப்பதன் மூலமாக நவக்கிரகங்களால் ஏற்படும் துயரங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ முடியும்.

பள்ளியில் படிக்கும் மகரராசி மாணவ, மாணவிகள் மிகவும் சுமாராகப் படிப்பார்கள். வேலையில் இருக்கும் மகர ராசி அன்பர்கள் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை பார்ப்பார்கள் அல்லது அதிக சம்பளம் இருந்தால் அங்கு அளவுக்கதிகமான தொல்லைகளை அனுபவிக்க கூடிய சூழ்நிலை இப்பொழுது இருக்கிறது. திருமணமாக இருக்கும் மகர ராசி அன்பர்கள் ஏதாவது ஒரு தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் இருக்கக்கூடிய சூழ்நிலை இப்போது உள்ளது. சொந்தத் தொழில் பார்க்கக்கூடிய மகர ராசி அன்பர்கள் பணம் கொடுக்கல் – வாங்கலில் தேவையில்லாமல் சிக்கி தவிக்கும் சூழ்நிலை இருக்கிறது. இவை அனைத்தும் படிப்படியாக விலகுவதற்கு சனிபகவானுக்கு நவக்கிரக பதவி கொடுத்த பைரவரின் அருளாசியை பெற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் பைரவ மந்திரஜபம் ஆகும்.

ஒரே சமயத்தில் ஜென்ம சனியும் நான்காமிடத்தில் ராகுவும் உங்களுக்கு அதிக அலைச்சல் மற்றும் விரக்தியை தரக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. எனவே சனிபகவானின் அருளை பெறவும் முயற்சி செய்ய வேண்டும். சனிபகவானின் பிராண தேவதை குரோதன பைரவர் ஆவார். அவருடைய மந்திரத்தை இங்கே கொடுத்திருக்கிறோம். பின்வரும் குரோதன பைரவர் மந்திரத்தை தினமும் ஒரு மணிநேரம் ஜெபித்து வருவது அவசியமாகும்.

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

ஓம் தாக்ஷயத் வாஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

அடுத்த 18 மாதங்கள் இவ்வாறு சம்ஹார பைரவர் மந்திரத்தையும் குரோதன பைரவர் மந்திரம் ஜெபித்து வருவதன் மூலமாக நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews