அமேசானின் அடுத்த பணிநீக்க நடவடிக்கை.. இந்த முறை இந்திய ஊழியர்களுக்கும் பாதிப்பு..!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஏற்கனவே இரண்டு முறை பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த முறை பணி நீக்க நடவடிக்கையில் சிக்கியவர்களில் இந்திய ஊழியர்களும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மற்றும் பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (PXT) ஆகிய பிரிவுகளில் உள்ள ஊழியர்களை பாதிக்கும் வகையில் அமேசான் இந்தியா ஒரு புதிய பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி மார்ச் மாதத்தில் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். அவற்றின்ஒரு பகுதியாக தற்போதைய ஆட்குறைப்பு சுற்று என கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இம்முறை பணி நீக்க நடவடிக்கையில் சுமார் 400-500 ஊழியர்களை பாதிக்கலாம் என்றும் குறிப்பாக பீப்பிள் எக்ஸ்பீரியன்ஸ் அண்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (பிஎக்ஸ்டி) பிரிவில் இருந்து சுமார் 100 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில், வெள்ளிக்கிழமை, எனது முழு அணியும் பணிநீக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 17 பேர். கடந்த வாரம் மட்டும் சுமார் நூறு பேர் PXT இலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை நான் சோதித்தேன். PXT மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமேசான் அதிகாரி ஒருவர் பணிநீக்க நடவடிக்கை குறித்து கூறியபோது, ‘இந்த முடிவுகள் இலகுவாக எடுக்கப்படவில்லை, நிறுவனத்தை விட்டு வெளியேறுபவர்கள் மற்றும் எங்களுடன் இருக்கும் எங்கள் சக ஊழியர்கள் இருவருக்கும் இது ஏற்படுத்தும் தாக்கத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews