கேட்கும் வரத்தை அருளும் விநாயகர் சதுர்த்தி உருவானது இப்படித்தான்..

விநாயகன் என்றால் ’சிறப்பான தலைவன் எனப் பொருள் . மனித உடலும், யானை தலையும், ஐந்து கரத்துடனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றை தாங்கிய நான்கு கரங்களோடு தும்பிக்கையும் சேர்ந்து ஐந்து கரங்களை கொண்டதால் ஐங்கரன்னும் பேர் உண்டானது.  ஐந்தாவது கரமான தும்பிக்கையின் மூலமா, படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றுவதால் மும்மூர்த்திகளும் இவருள் அடக்கம் என்கிறது விநாயக புராணம்.

விநாயகர் சதுர்த்தி உருவான கதை…

உலகமே கொண்டாடும் இந்த விரதத்தை தொடங்கியவர் பார்வதிதேவியாகும். ஒருமுறை பார்வதிதேவி, தட்சனின் மகளாக தாட்சாயணியாக அவதரித்தாள். கணவரான சிவனை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்க போனாள் தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.  இந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாகக்குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.

அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதின்ற  பெயரில் வளர்ந்து வந்தாள்.  சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டுமென்றால் அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையான பர்வதராஜன் யோசனை சொன்னார்.  அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் உருவத்தை செய்து,  கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.

 அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள். அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.

தன் எண்ணப்படியே சிவனை கரம் பிடித்ததால், சாமானிய மக்களும் இதனால் பயன்பெற வேண்டுமென நினைத்து, விநாயகரிடம், உன்னை உள்ளன்போடு விநாயகர் சதுர்த்தி விரதமிருந்து உன்னை வழிபடுவோருக்கு அவர் கேட்கும் வரம் அருள வேண்டுமென விநாயகரிடம் வரம் வாங்கி கொண்டாள்.

இப்படித்தான் விநாயகர் சதுர்த்தி உருவானது. வேண்டும் வரம் கிட்டும் இந்நாளில் விநாயகரை தொழுது பலன் பெறுவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews